உச்சத்தைத் தொட்டது டீசல் விலை- சென்னையில் லிட். ரூ64.28; டெல்லியில் ரூ60.66க்கு விற்பனை!
வரலாறு காணாத வகையில் டீசல் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
டெல்லி: டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் அதிக உச்சமாக சென்னையில் ரூ64.28 க்கும் டெல்லியில் ரூ60.66 க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்சமயம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73.25 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 64.28 ரூபாயாகவும் இருக்கிறது.
அதேபோல டெல்லியிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70.66 ரூபாயாகவும், டீசலின் விலை 60.66 ரூபாயாகவும் ஏற்றம் கண்டு உள்ளது. மற்ற மாநிலங்களிலும் எரிபொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.
விலையேற்றத்தால் பொதுமக்கள் கவலை
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்த வழக்கத்தை விடுத்து, பெட்ரோலிய நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
விலை இன்னும் அதிகரிக்கும்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தான் காரணம் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. தற்சமயம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 68 .13 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க பெட்ரோலிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாலும், லிபியாவில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தினந்தோறும் 90,000 பேரல்கள் என்கிற அளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மத்தியமைச்சர் யோசனை
இதுகுறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், அதிகரித்து வரும் தேவை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அதிகரித்து உள்ளது. இதைத் தவிர்க்க மத்திய அரசுக்கு வர வேண்டிய கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து உள்ளது. அதுபோல மாநில அரசுகளும் தங்களுக்கு வர வேண்டிய மதிப்பு கூட்டு வரியை குறைத்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். இதுவரை குஜராத், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் ஏற்படாத எரிபொருள் விலை
இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத விலையை எட்டியது. அப்போது 104.09 டாலராக இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் உச்சத்தை தொட்டது. ஆனால், படிப்படியாக விலை குறைந்து கடந்த செப்டம்பரில் 58 டாலராக ஆனது. இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கவலையடைந்து உள்ளனர்.