போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை தாண்டியது... சென்னையில் ரூ.85.31ஆக விற்பனை
நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 90 ரூபாயை எட்டியுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தின் சில நகரங்களில், முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ 91ஐ தாண்டியுள்ளது. போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.05 ஆகவும், டீசல் விலை ரூ 80.10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதிக வாட் வரி காரணமாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.
அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன.
கொரோனா லாக்டவுன் காலமாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
85 ரூபாய்க்கு மேலே பெட்ரோல் விலை சென்றதை அடுத்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து மீண்டும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.85.31ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.77.84 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
மத்தியபிரதேச தலைநகர் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.05 ஆகவும், டீசல் விலை ரூ 80.10 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக மத்திய பிரதேச பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தவிர, அதிக வாட் வரி காரணமாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இதே வேகத்தில் பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டால் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை எட்டிவிடும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டிலேயே குறைந்த அளவாக ஒரு லிட்டர் பெட்ரோல் சண்டிகரில் 79 ரூபாய் 28 பைசாவாக விற்பனையாகிறது. வதேதராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 42 பைசாவாகவும், சூரத்தில் 79 ரூபாய் 76 பைசாவாகவும், அகமதாபாத்தில் 79 ரூபாய் 77 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.