பெட்ரோல் விலை லிட்.ரூ.2.42, டீசல் விலை லிட். ரூ.2.25 குறைந்தது
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 மற்றும் டீசல் விலை ரூ.2.25 குறைக்கப்பட்டது. அதேசமயத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2ரூபாய் அதிகரித்துள்ளது. இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மாதந்தோறும் 1 மற்றும் 16ஆம் தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்படுகிறது.
பெட்ரோல் விலை எவ்வளவு?
இதன்படி, சென்னையில் இதுவரை 63 ரூபாய் 94 பைசாவுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 2 ரூபாய் 56 காசுகள் குறைந்து இனி 61ரூபாய் 38 பைசாவுக்கு விற்பனையாகும்.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 ரூபாய் 91பைசாவாக இருக்கும். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 48 ரூபாய் 26 பைசாவாக இருக்கும்.
டீசல் விலை எவ்வளவு
இதேபோல் 53 ரூபாய் 78 பைசாவிற்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 2 ரூபாய் 44 காசுகள் குறைந்து இனி 51 ரூபாய் 34 பைசாவிற்கு விற்பனையாகும் என பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆகஸ்ட் முதல் குறைப்பு
கடந்த ஆகஸ்ட் முதல் பெட்ரோல் விலைகள் 9-வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய விலைக்குறைப்பின் மூலம் ஆகஸ்ட் முதல் மொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69 குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் விலையும் இதுவரை மொத்தத்தில் லிட்டருக்கு ரூ.10.71 குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி வரி அதிகரிப்பு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 46 டாலர்கள் குறைந்ததன் அனுகூலங்களை இந்த உற்பத்தி வரி அதிகரிப்பு இழக்கச் செய்துள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி அதிகரிப்பினால் விலை குறைப்பு இருக்காது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது விலையைக் குறைத்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள்
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவு கண்டதன் அடிப்படையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.7.75, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.6.50 குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு குறைக்கப்படாது ஓரளவுக்கு அதன் அனுகூலங்களை மக்களுக்கு அளித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள்.
வருவாய் அதிகரிப்பு
மேலும், 4 முறை உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதினால், நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையை 4.1%-ஆகக் குறைக்கும் இலக்கை எட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.