இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு.. சதம் 'விளாசியது' பெட்ரோல் விலை.. ராஜஸ்தான் டாப்
ஜெய்ப்பூர்: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் விளாசியுள்ளது. தொடர்ந்து 9வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்த நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் 100 ரூபாய் என்ற மூன்றிலக்கத்தை தாண்டியுள்ளது.
ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி மிகவும் அதிகமாகவும். எனவே பெட்ரோல் விலை உயர்வு அங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த மாநிலத்திலுள்ள கங்காநகர் என்ற டவுன் பகுதியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 என்ற விலைக்கு விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலை சதம் கடந்த நகர் என்ற நிலைமைக்கு அந்த ஊர் தள்ளப்பட்டுள்ளது.
அதிக வாட் வரி
அங்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.13 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் எரிபொருள்கள் மீதான வாட் வரியில் 2 சதவீதத்தை ராஜஸ்தான் குறைத்தது. ஆனால் இப்போதும் பெட்ரோல் மீதான வாட் வரி 36 சதவீதம் மற்றும் ரோடு செஸ் ரூ.1.5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிகமாகும்.
சதம் விளாசியது
ஸ்ரீகங்காநகரில் பிராண்டட் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.91 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ரூ.96.01, டீசல் விலை ரூ.88.34 என்ற அளவில் உள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.45 ரூபாய், டீசல் லிட்டர் 84.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91.68 ரூபாய் எனவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து , லிட்டர் 85.01 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் நிலவுகிறது.