என்ன கொடுமை சரவணா இது?... பெட்ரோல் விலை 4 பைசா குறைப்பு.. டீசல் 3 பைசா!!
டெல்லி: பெட்ரோல் டீசல் விலையை தம்மாத்தூண்டுக்குக் குறைத்து ஏற்கனவே எரிந்து கொண்டுள்ள மக்களின் மனங்களில் பெட்ரோலை ஊற்றி விட்டுள்ளன எண்ணைய் நிறுவனங்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவுதான் அடிமட்டத்திற்கு இறங்கிப் போனாலும் நாங்க மட்டும் விலையைக் குறைப்பதில் கஞ்சத்தனமாகத்தான் நடப்போம் என்று எண்ணெய் நிறுவனங்கள் பிடிவாதமாக உள்ளன.
வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பைசாக் கணக்கில்தான் நமது எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலால் வரி உயர்வு
ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலையை பைசாக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வரும் நிலையில் மறுபக்கம் சமீபத்தில் கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு.
கொஞ்ச பலனிலும் கொள்ளி
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த சிறிதளவு பலனைக் கூட மக்களால் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
ஆக்சுவலி இப்படிக் குறைந்திருக்க வேண்டும்
கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 4 டாலர் வரை இறங்கியது. இதனால் பெட்ரோல் விலை ரூ. 1.04ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.53 என்றும் குறைந்திருக்க வேண்டும். அதாவது ஞாயிற்றுக்கிழமை இது குறைந்திருக்க வேண்டும்.
கலால் வரி உயர்வால்
ஆனால் கலால் வரியை மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ. 1 என்றும், டீசலுக்கு ரூ. 1.50 என்றும் உயர்த்தியதால் அதில் பங்கம் வந்தது.
இம்புட்டூண்டு!
இந்த கலால் வரி உயர்வு குறுக்கே வந்து சேர்ந்ததால் பெட்ரோல் விலை 4 பைசாவும், டீசல் விலை 3 காசும் மட்டுமே குறைந்துள்ளது.
3வது முறையாக கலால் வரி உயர்வு
கடந்த 3 மாதத்தில் கலால் வரி உயர்த்தப்படுவது இது 3வது முறையாகும். தற்போதைய கலால் வரி உயர்வின் மூலம் ரூ. 3200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்குமாம். 3 உயர்வுகளையும் சேர்த்தால் ரூ. 17,000 கோடி கிடைக்குமாம்.
என்னடா கொடுமை இது என்று மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.. என்ன செய்வது நம்மால் அது மட்டுமே முடியும்!