வரி பாதிப்பு: மகாராஷ்டிராவில் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள 4100 பெட்ரோல் பங்குகள்
மும்பை: மாநில அரசின் அதிகப்படியான வரி விதிப்புகளை எதிர்த்து மகாராஷ்டிராவில் 4100 பெட்ரோல் பங்குகள் இன்று 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இநத் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அனைத்து மகாராஷ்டிரா பெட்ரோல் டீலர் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. இதையேற்று மாநிலத்தின் 4100 பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தங்களது பங்குகளை மூடியுள்ளன. சுமார் 500 பங்குகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மகாராஷ்டிரா பெட்ரோல் டீலர் சங்க தலைவர் ஏ.எஸ்.தீக்ஷித் நிருபர்களிடம் கூறுகையில் "பல்வேறு வகையான வரிகள் போடப்படுவதால் நாட்டிலேயே மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிட்டால் ரூ.5-7 வரை பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடு காணப்படுகிறது.
அதிலும் புனே நகரில் நாட்டிலேயே மிக அதிக விலைக்கு பெட்ரோல்-டீசல் விற்பனையாகிறது. இங்கு லிட்டருக்கு அதிகபட்சம் 9 ரூபாய் வரை வித்தியாசம் உள்ளது. ஒரே நாட்டில் இப்படி மாறுபட்ட பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்தால், மகாராஷ்டிரா பங்க்குகளில் வியாபாரம் எப்படி ஆகும்? எனவேதான் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.