மணிப்பூரில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.300-க்கு விற்ற அவலம்
மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300-க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக ஒருங்கிங்கிணைந்த நாகா கவுன்சில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தடையின் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300-க்கு விற்பனை செய்த அவலம் அரங்கேறியது.
நாகா கவுன்சில் விடுத்துள்ள தடையினால் அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அளவுக்கு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அசாமில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் எண்ணெய் லாரிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாகா அமைப்பினரின் போராட்டத்தை மணிப்பூர் அரசு பெரிதுபடுத்தவில்லை என்ற போதிலும் அந்த அமைப்பினர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும், போராட்டத்தை திரும்பப் பெறுமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை அந்த அமைப்பினர் காதில் வாங்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர மணிப்பூர் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலைமை சீரடையவில்லை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. மக்களுக்கான அன்றாடத் தேவை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், சந்தைகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் அத்தியவாசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இத்தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மணிப்பூர் மாநில தலைமைச் செயலாளர் நபி கிஷோர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றால் எரிபொருள் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து கொண்டுவர அந்த மாநில முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங் அறிவுறுத்தியுள்ளார்.