எல்.பி.ஜி. சிலிண்டருக்கு ரூ.19... மண்ணெண்ணெய்க்கு ரூ.12... மானிய உச்சவரம்பை நிர்ணயித்தது மத்திய அரசு
டெல்லி : மானிய உச்சவரம்பாக சமையல் எரிவாயு (எல்பிஜி) கிலோவுக்கு ரூ.19 ஆகவும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது...
14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.167.18 இழப்பு ஏற்படுகிறது. மானிய விலையில் இந்த சிலிண்டர் ரூ.417.82 க்கு விற்கப்படுகிறது. இதற்கு மானிய உச்சவரம்பாக கிலோவுக்கு ரூ.19 என அரசு நிர்ணயித்து, நேரடி மானியமாக வழங்கி வருகிறது.
இதன்படி, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மத்திய அரசு மானியமாக ஐஓசிக்கு ரூ.1,733 கோடி, பாரத் பெட்ரோலியம் ரூ.404 கோடி, இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.451கோடி வழங்கும். சமையல் எரிவாயுவை பொறுத்தவரை ஐஓசிக்கு ரூ.2,506 கோடி, பாரத் பெட்ரோலியம் ரூ.1,155 கோடி, இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.1,183 கோடி வழங்க வேண்டும் என்றார்.
இதே போன்று பொது விநியோக திட்டத்தில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.14.96 என விற்கப்படுகிறது. உண்மையில் இதன் உற்பத்தி செலவு ரூ.29.91. எனவே எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.14.95 இழப்பு ஏற்படுகிறது.
இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு மானிய உச்சவரம்பாக ரூ.12 மட்டும் வழங்குகிறது. எஞ்சிய இழப்பான ரூ.2.95 ஐ ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதனால் தற்போதைய விலையின்படி இந்நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி மானிய சுமை ஏற்படும்.
மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கி வருகிறது. 2015-16 நிதியாண்டில் சமையல் எரிவாயுவுக்கு ரூ.22,000கோடி, மண்ணெண்ணெய்க்கு ரூ.8,000 கோடி மானியமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
எல்.பி.ஜி., மற்றும் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை உயர்த்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.