பொது டாய்லெட்டில் செல்போன் எண்: சிவசேனா பெண் தலைவருக்கு வரும் ஆபாச அழைப்புகள்
மும்பை: பொதுக் கழிவறையில் எழுதப்பட்டிருந்த சிவசேனா கட்சி பெண் தலைவரின் செல்போன் எண்ணை வைத்து அவருக்கு சிலர் போன் செய்து அசிங்கமாக பேசியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் ஷீத்தல் மகத்ரே. சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். அவரது செல்போன் எண் தெருவோரம் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்று மற்றும் தஹிசார் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு பல எண்களில் இருந்து போன் வந்தது.
மறுமுனையில் பேசியவர்கள் அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால் மனம் நொந்து இருந்த ஷீத்தலுக்கு எதிராக கண்டன பேரணி நடத்துமாறு சிவ சேனா எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர் கட்சியின் பெண் அமைப்புகளை கேட்டுக் கொண்ட விவரம் தெரிய வந்தது. இதையடுத்து ஷீத்தலுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோசல்கர் எதற்காக ஷீத்தலுக்கு எதிராக பேரணி நடத்தக் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அவரோ தான் அவ்வாறு கூறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தனக்கு வந்த போன் கால்கள் குறித்து போலீசில் புகார் அளித்த ஷீத்தல் எம்.எல்.ஏ. வினோத் மீது கட்சியில் புகார் செய்தார். கட்சி தலைமை முதலில் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கட்சியை விட்டு விலகுவது என்று ஷீத்தல் முடிவு செய்தார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்ததையடுத்து கட்சியை விட்டு விலகும் முடிவை ஓரங்கட்டிவிட்டார் ஷீத்தல்.