சி.என்.ஆர். ராவ்-க்கு பாரத ரத்னா விருதா? ப்ளஸ் டூ மாணவன் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
அலகாபாத்: பாரத ரத்னா விருதுக்கு விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் ப்ளஸ் டூ மாணவன் தாக்கல் செய்த பொதுநலன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. சச்சின் டெண்டுல்கரை விட மூத்த விளையாட்டு வீரர்கள் இருக்கும் போது அவருக்கு ஏன் இப்போதே பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரும் ப்ளஸ் டூ மாணவர் ஒருவரும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அம்மனுவில், சாதனை படைத்த விஞ்ஞானிகள் ஜெகதீஷ் சந்திர போஸ், ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் சி.என்.ஆர். ராவைவிட அறிவியல்துறைக்கு அதிகம் பங்களிக்கு செய்திருக்கின்றனர்.
அத்துடன் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான ஆய்வு கட்டுரைகளை தன்னுடையதாக பதிவு செய்து மன்னிப்பும் கேட்டவர் சி.என்.ஆர். ராவ், அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.