இரட்டை ஆதாய பதவியால் ஹரியானா பாஜக எம்எல்ஏக்களுக்கு செக்... தகுதி நீக்கம் கோரி வழக்கு!
ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர் : இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹரியானா மாநில எம்எல்ஏக்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 எம்எல்ஏக்களும் ஹரியானா அரசால் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தப்பது.
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் இரட்டை ஆதாய பதவி வகித்த விவகாரத்ததால் அவர்களை தகுதி நீக்க செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் ஏற்ற நிலையில் 20 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.
இருந்த போதும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவதோடு, இடைத்தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலும் இரட்டை ஆதாய பதவியை அனுபவித்து வரும் 4 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் ஷியாம் சிங் ரானா, பாக்சிஷ் சிங் விர்க்இ சீமான த்ரிக்கா மற்றும் கமல் குப்தா உள்ளிட்ட 4 பேர் கடந்த 2015ம் ஆண்டு ஹரியானா மாநில அரசால் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் 2016ம் ஆண்டு நீதிமன்றம் 4 பேரின் நியமனம் செல்லாது என்று அறிவித்தது. இதனையடுத்து அவர்கள் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் 4 பேரும் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
டெல்லியில் இரட்டை ஆதாய பதவி வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மியின் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளநிலையில் ஹரியானா மாநில 4 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஜக்மோகன்சிங் பாத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதோடு அவர்களுக்கு ஓய்வூதியம் உள்பட எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்றும் அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
"நாடாளுமன்ற செயலாளர் என்ற நியமனமே அரசியலமைப்புக்கு விரோதமானதுதான் என நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டி உத்தரவிட்டு உள்ளது. ஹரியானாவும், டெல்லியும் இந்தியாவின் ஒருபகுதியென்றால் எப்படி இரண்டு சட்டம் வரும்? பா.ஜனதாவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்," என்று பாத்தி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.