படேல்களுக்கு ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்கும் முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: குஜராத் கோர்ட்டில்
அகமதாபாத்: படேல் சமூகத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத்தில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் படேல் சமூகம், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க போராடி வருகிறது. நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த போராட்டம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முஸ்டக் காத்ரி என்பவர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் இடஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக மாநில அரசு ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே படேல்கள், மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என மகாராஷ்டிரா இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.