கணவரின் சந்தேகம்... ‘அழகான முகத்தை’ தீயில் கருக்கிக் கொண்ட உ.பி. பெண்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் அழகான தோற்றத்தால் கணவரின் சந்தேகத்திற்கு ஆளான மனைவி ஒருவர், தனது முகத்தை தானே தீயில் கருக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேகா லோதி. கடந்த 2011ம் ஆண்டு திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. தன் கணவரை விட ரேகா அழகாக இருப்பாராம். இதனால் அவரது கணவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.
அதனை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது மனைவியை அடித்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர் துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டிற்கு வெளியே வேறு யாருடனும் பேசக்கூடாது எனவும் அவர் கட்டுப்பாடு விதித்துள்ளார். மீறி பேசினால் அவர்களுடன் இணைத்து பேசி ரேகாவை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ரேகா, தனது அழகிய முகத்தினாலேயே இவ்வாறு தான் துன்பத்திற்கு ஆளாவதாக நினைத்துள்ளார். எனவே, தன்னை அவலட்சணமாக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக தனது முகத்தை தானே நெருப்பில் கருக்கினார். இதனால் வலியால் துடித்த ரேகாவை அக்கம்பக்கத்தார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ரேகாவின் முகமானது 20-25 சதவீதம் எரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறாது.