பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றாலும் இனி ஹெல்மெட் கட்டாயம்: இது கர்நாடகாவில்..
பெங்களூர்: இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் இனி ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் போடுவதில் குறியாக உள்ளனர்.
இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தபோதிலும் அது முறையாக பின்பற்றப்படாமல் உள்ளது. மக்கள் ஹெல்மெட்டுகள் வாங்க அரசு 15 நாட்கள் அவகாசம் அளிக்கும். அதன் பிறகு அந்த சட்டம் முறையாக பின்பற்றப்படும். சட்டத்தை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
கர்நாடகாவில் 1.31 கோடி இருசக்கர வாகனங்கள் இருப்பதால் இந்த புதிய சட்டத்தினால் ஹெல்மெட் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.