30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... குளிப்பதை படமெடுத்த பள்ளி முதல்வரின் கொடூரம்
பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி முதல்வர் ஒருவர் 30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவிகள் குளிப்பதை படமெடுத்தும் ரசித்துள்ளான் அந்த காமக்கொடூரன்.
பெங்களூர் அருகே உள்ள அனேக்கல் தாலுகாவை சேர்ந்த பள்ளியின் முதல்வர் ஒருவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
52 வயதான மல்லிகார்ஜுன் கார்கே என்ற காமக்கொடூரன் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை அம்மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளி பரப்பின. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டான்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்தது.
போதை தலைக்கேறிய பின் மாணவிகளிடம் அவர்களது தலையணையை எடுத்து வரச்சொல்லி கனவுகளில் மிதப்பது அவரது வாடிக்கை.
ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமின் கதவுகளின் தாழ்ப்பாள்களை கழற்றியதுடன் மாணவிகள் குளிப்பதையும் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளான் இந்த காமுகன். குழந்தைகள் நல ஆணைய குழுவினர் பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 15 வயது மாணவி ஒருவருக்கு கார்கே தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக பெண்கள் ஆணைய உறுப்பினரான விசாலாட்சி கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த மாணவி மாஜிஸ்திரேட் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில் தன்னிடமும் மற்ற மாணவிகளிடமும் தகாத முறையில் நடந்ததுடன் உடலில் பல பாகங்களில் கை வைத்ததையும் அம்மாணவி வேதனையுடன் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெங்களூர் ஊரக கண்காணிப்பாளரான பி.ரமேஷ் தலையிட்ட பின் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.