அன்று நச்சிகேத்தா.. கார்கில் நாயகன் போல மீண்டு வர வேண்டும் அபிநந்தன்.. ஒலிக்கும் குரல்கள்
நச்சிகேத்தா போல் அபிநந்தன் மீண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.
Recommended Video
ஜம்மு: பாகிஸ்தான் படையிடம் சிக்கியுள்ளார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன். இந்த நேரத்தில் நமக்கு நச்சிகேத்தா நினைவுக்கு வருகிறார்.
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது ஹீரோவாக உயர்ந்தவர்தான் நச்சிகேத்தா. இன்னமும் நம்மால் மறக்க முடியாத விமானி கம்பம்பட்டி நச்சிகேத்தா. அப்போது இவருக்கு வயது வெறும் 26தான்.
பாகிஸ்தானில் இருந்த ராணுவ முகாம்களை இந்தியா தாக்கும் நோக்கில் விமானப்படை விமானங்கள் கிளம்பின. அப்போது நச்சிகேத்தா ஓட்டிச் சென்ற போர் விமானம் தாக்குதலை முடித்து விட்டுத் திரும்பியபோது பழுதடைந்தது.
சிறைபிடித்தனர்
இதனால் வேறு வழியில்லாமல் பாராசூட் மூலம் கீழே குதித்தார் நச்சிக்கேத்தா. துரதிர்ஷ்டவசமாக அவர் பாகிஸ்தான் பகுதியில் போய் விழுந்து விட்டார். அப்போதும் கூட அவர் தைரியமாக பாகிஸ்தான் படையினரை சுட்டார். இருப்பினும் அவர் சிறை பிடிக்கப்பட்டார்.
தைரியம்
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அவரை மிகக் கடுமையாக கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தது பாகிஸ்தான் படை. ஆனாலும் ஒரு ரகசியத்தையும் அவர் கசிய விடவில்லை. தைரியமாக அந்த கொடூரத்தை சந்தித்தார். பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவரே நச்சிக்கேத்தாவின் மன தைரியத்தைப் பார்த்து வியந்து போய் சித்திரவதையை நிறுத்தச் சொன்னதாக பின்னாளில் தொலைக்காட்சி பேட்டியின்போது தெரிவித்தார் நச்சிக்கேத்தா.
போர்க்கைதி
பாகிஸ்தான் படையினர் வெறி பிடித்தவர்கள் போல நடந்து கொண்டனர். கொல்ல முயன்றனர். ஆனால் அந்த அதிகாரி முதிர்ச்சியுடன் இருந்தார். என்னைப் போர்க் கைதி என்று கூறி வீரர்களை அமைதிப்படுத்தினார் என்றார் நச்சிக்கேத்தா. 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை போர்க் கைதியாக இருந்தார் நச்சிக்கேத்தா. அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறைபிடித்துள்ளனர்
நாடு திரும்பிய ஹீரோ நச்சிக்கேத்தாவுக்கு விமானப்படையின் மிக உயரிய விருதான 'வாயு சேனா' விருது வழங்கப்பட்டது. இப்போது அபிநந்தனும் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நச்சிக்கேத்தாவின் நிலைதான் இவருக்கும் இருக்கும். ஆனாலும் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளைப் பார்த்தால் அபிநந்தன் மிகவும் மன உறுதியுடன் இருப்பது போலவே தெரிகிறது.
தேசம் முழுக்க குரல்
போர்க்கைதியை விடுவிக்க கால வரையறை எல்லாம் இல்லை. ஆனால் நிச்சயம் பாகிஸ்தான் நம்மை பிளாக்மெயில் செய்யும். தாக்குதலை நிறுத்தக் கேட்கும். இதுபோல மிரட்டிப் பணிய வைக்கவே அது கடந்த காலத்திலும் கூட நடந்துள்ளது. எனவே அபிநந்தன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்ற குரல் தேசம் முழுக்க கேட்க ஆரம்பித்துள்ளது.
பிடிபட்ட இந்திய விமானியை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள்.. பாகிஸ்தானியர்கள் கோரிக்கை