அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன்... சூடுபிடிக்கும் வார்த்தைப் போர்!
கேரள மாநிலத்தில் 'மக்கள் பாதுகாப்பு பேரணி' நடத்திக் கொண்டிருக்கும் பிஜேபி கட்சியின் தலைவர் அமித்ஷாவின் கேள்விகளுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் வலிமையைக் காட்டும் வகையில் அமித்ஷா தலைமையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. ஒருவாரம் நடக்க இருக்கும் இந்தப் பேரணியில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய பேரணியின் போது கேரளாவில் நிகழும் மருத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி உத்திர பிரதேச முதல்வர் யோகி பேசி இருந்தார். மேலும் பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா கேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்றும் சாடி இருந்தார்.
மேலும் நேற்று மாலை பேசிய உத்திர பிரதேச முதல்வர் யோகி, கேரளாவில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் பேசி இருந்தார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையில் வார்த்தைப் போர் மூண்டது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன் " அமித்ஷா ஒரு அணைந்து போன வெடி'' என்று குறிப்பிட்டார். மேலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ல் இருக்கும் அனைவருமே அணைந்து போன வெடிக்கள்தான் என்றும் குறிப்பிட்டார். கேரளாவில் வன்முறையைத் தூண்டிவிட பாஜக முயல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் '' நீங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்களை பார்த்து நாங்கள் எப்போதும் பயந்தது இல்லை. ஆர்.எஸ்.எஸ்ன் எந்தத் தலைவர் வந்தாலும் அவர்களை பார்த்து நாங்கள் பயப்படப் போவது இல்லை'' என்றும் கூறினார்.