ரூ.700 கோடி கொடுப்பதாக யுஏஇ சொன்னது உண்மைதான்... மீண்டும் அடித்து கூறுகிறார் பினராயி விஜயன்
டெல்லி: ரூ.700 கோடி கொடுப்பதாக ஐக்கிய அரபு நாடுகள் கூறியது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளத்தில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி அவை திறந்துவிடப்பட்டன. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களையும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
இதையடுத்து நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் ரூ.700 கோடியை நிதியாக வழங்குவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
உத்தரவாதம் அளிக்கவில்லை
எனினும் இந்த நிதியுதவியை மத்திய அரசு மறுப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் ரூ.700 கோடி நிதியை தருவதாக தாங்கள் எந்த உத்தரவாதத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஐக்கிய அரபு நாடுகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
அறிவிக்கவில்லை
இதுகுறித்து ஐக்கிய அரபு நாடுகளின் டெல்லி தூதரகத்தில் அதிகாரிகள் கூறுகையில் கேரள நிவாரண நிதியாக தாங்கள் நிதியுதவி வழங்குவதாக எந்த வித அறிவிப்பையும் யுஏஇ சார்பில் வெளியிடவில்லை என்று தெரிவித்தனர்.
உண்மைதான்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிதியுதவி செய்யலாம் என்பதை அடுத்த சில நாட்களில் மட்டுமே வளைகுடா நாடுகள் முடிவு செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பினராயி விஜயனோ இல்லை அவர்கள் ரூ.700 கோடி நிதியுதவி அளிப்பதாக கூறியது உண்மைதான் என்று அடித்து கூறுகிறார்.
தொழிலதிபர்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் வெளிநாடு வாழ் தொழிலதிபர் எம்.ஏ. யூசுப் அலி பக்ரீத் பண்டிகையின்போது வாழ்த்து கூற அரபு அரசரை சந்தித்தார். அப்போது அவர் யூசுப் அலியிடம் கேரளத்துக்கு ரூ 700 கோடி நிதியதவி வழங்குவதாக தெரிவித்தாராம்.
டுவிட்டரில் அறிவிப்பு
அதை யூசுப் அலி என்னிடம் கூறினார். உடனே நான் இதுகுறித்து பத்திரிகை செய்திகளுக்கு அறிவிக்கலாமா என கேட்டேன். அவரும் அறிவித்து கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார். அதன்பேரில் எனது டுவிட்டர் பக்கத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறினேன்.
மத்திய அரசு நிதியை ஏற்கும்
இந்த நிதியை மத்திய அரசு ஏற்பதா வேண்டாமா என்பதை முடிவு எடுக்கும். எனினும் அந்த நிதியை மத்திய அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பினராயி விஜயன் கூறியுள்ளார். ரூ. 700 கோடி நிதியுதவி அளிப்பதாக தாங்கள் கூறவில்லை என்று அரபு நாடுகள் கூறுவதும் இல்லை அவர்கள் கூறினர் என்று பினராயி விஜயன் பதில் கூறுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.