மாணவர்களின் மதிய உணவிற்கும் ஆதார் கார்டுக்கும் என்ன சம்பந்தம்… கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி
மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கு வெளிப்படைத்தன்மை வேண்டுமே ஒழிய எதற்காக ஆதார் கார்டு வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவனந்தபுரம்: பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மதிய உணவு உண்ணும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பள்ளியில் கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாஜகவிற்கு கண்டனம்
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக் பதிவு
மத்திய அரசின் இந்த முடிவு அபத்தமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது என்றும் இதற்கான பின்னனி என்ன என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் பினராய் விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதிய உணவிற்கு தடை
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குழந்தைகளின் மதிய உணவு உட்கொள்வதில் தடைகளை ஏற்படுத்தும் என்றும் கேரள முதல்வ பினராய் விஜயன் கூறியுள்ளார். மேலும், மதிய உணவு அளிப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியமே தவிர ஆதார் கார்டு எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வயிற்றில் அடிப்பு
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஏழைகள், ஏழைக் குழந்தைகளின் வயிற்றில் அடிப்பதையே அடிப்படை வேலையாக கொண்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால் மோடி அரசு அடுத்த முறை ஆட்சி பிடிக்க முடியாது என்றும் கேரள மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.