கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்ற முடியவில்லை.. ரிசர்வ் வங்கி வாசலில் அமர்ந்து கேரள முதல்வர் தர்ணா
கூட்டுறவு வங்கிகள் மூலம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டம் நடத்தி வருகிறார்.
திருவனந்தபுரம்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் மாற்றிக் கொள்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாசல் முன்பு அமர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து மக்கள் வங்கி மற்றும் அஞ்சலகங்களுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.
இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் சென்று பழைய நோட்டை மாற்ற முயற்சி செய்தனர். அப்போது அவர்களால் அங்கு பணத்தை மாற்ற முடியவில்லை. மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்புவதில்லை என்று விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பழைய நோட்டுக்களை மாற்ற கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக கேரள அரசு பல முறை கோரியும் ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத ரிசர்வ் வங்கி கண்டித்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவருடை அமைச்சர்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பினராய் விஜயன், "நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடியது விவசாயம் சார்ந்த பொருளாதாரம் தான். அதனை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். இதுதொடர்பாக வரும் 21ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.
இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்தப் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. போராட்டத்தில் ஆளும் கட்சி மட்டும் இல்லாமல் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.