சாப்ட்வேர் நிறுவனங்களை கேரளாவுக்கு இழுக்க பிரனாயி விஜயன் அதிரடி திட்டம்
திருவனந்தபுரம்: தகவல் தொழில் நுட்ப துறைக்கு முக்கியத்துவம் தர உள்ளதாகவும், 'ஐடி ஹப்'களை கேரளாவில் உருவாக்க உள்ளதாகவும், இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் பேட்டி, கேரளத்தின், தொழில் வளர்ச்சிக்கு இடதுசாரி அரசுகள் தடைக்கற்களாக இருந்த காலத்தை மாற்றி, புது யுகத்தை நோக்கிய முன் நகர்வின் அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் தொழில் தொடங்க முதலாளிகளுக்கு இன்னமும் தைரியம் வரவில்லை. இதற்கு காரணம் அங்குள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஆதிக்கம்.
தொழில் தொடக்கம்
தொழிலாளர் நலனை பேணுவதற்காக தொழிற்சங்கங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை கொஞ்சம் ஓவர் டோசாக இருப்பதால் தொழில் தொடங்க முடிவதில்லை என்பது முதலாளிகள் புலம்பல்.
வெளி மாநிலங்கள்
இதன் காரணமாக, வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மலையாளிகள் இடம் பெயர்கிறார்கள். சென்னையின் பெரும்பாலான டீ கடை முதலாளிகளும், பெங்களூரின் பெரும்பாலான பை தைக்கும், கேட்டரிங் செய்யும் தொழிலாளர்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள். அரபு நாடுகளிலும் இவர்கள் ஆதிக்கமே.
மாறிவிட்டது
இந்நிலையில் பிரனாயி விஜயன் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது: கேரளம் இப்போது பழைய மாதிரியில்லை. இங்குள்ள தொழிற்சங்கங்களும், நிறுவனங்களும் இணைந்து, செயல்பட தயாராக உள்ளன.
சாலை, ரயில் போக்குவரத்து
கேரளாவில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். இதற்கு வசதியாக சாலை விரிவாக்கம், ரயில் பாதை அதிகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் முதலில் மேற்கொள்ளப்படும்.
நிலம் இழந்தாலும் இழப்பீடு
இந்த பணிகளின்போது நிலம் இழப்போருக்கு முன்பு மாதிரியில்லாமல் புதுமாதிரி மிகுந்த பலன் அளிக்கும் பேக்கேஜ் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் அவர்கள் சம்மதத்தோடு நிலம் வாங்க முடியும்.
கேரளாவின் தனித்தன்மை
அதேநேரம், எல்லா தொழிற்சாலைகளுக்கும் கேரளா கம்பளம் விரிக்காது. இந்த மண்ணுக்கு உகந்த தொழில் நிறுவனங்களை மட்டுமே அனுமதிப்போம். சுற்றுலாத்துறை, விவசாய துறை போன்றவை சார்ந்த முதலீடுகள் வரவேற்கப்படும்.
சிலிக்கான்வேலி
அதேபோல, சுற்றுச்சூழலை ஊறுவிளைவிக்காத தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். அவர் பிற ஐடி நிறுவனங்களோடு ஆலோசித்து, அமெரிக்காவின் சிலிக்கான்வேலிபோல, கேரளாவில் 'ஐடி ஹப்' தொடங்க உதவுவதாக கூறியுள்ளார்.
அரசியல் மோதல்
பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குவதாக மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். முதலில் அவரது கட்சி தொண்டர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.