பொதுமக்கள் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது: பியூஷ் கோயல்
டெல்லி: பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நிறைய கேள்விகளைக் கேட்க மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்திருக்கிறது என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அரசு நூறு சதவிகிதம் பொதுமக்களின் பக்கம் நிற்கிறது" என்று உறுதி கூறினார்.
மேலும், தனியார் நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பணம் குறித்து பேசிய பியூஷ் கோயல், தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொது மக்களின் பணம் எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது என்னால் உறுதியளிக்க முடியாது. மேலும், அந்த பணங்களுக்கு அதிகப்படியான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "அண்மையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், பொதுத்துறை வங்கிகளை அதிகாரத்துடன் கையாள்வதில் மத்திய வங்கிக்கு சில அதிகாரக் குறைகள் உள்ளன என்று தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார் என்று கூறியவர், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன ஆனால் இன்னும் கூடுதலான அதிகாரங்கள் தேவை என்ற கருத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று கூறினார்.
மேலும், பியூஷ் கோயல் கூறுகையில், "பொதுத்துறை வங்கிகள் நேர்மையான நிறுவனங்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதோடு, பொதுத்துறை வங்கிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.