ரயில்வே உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்களில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்- கெளடா
டெல்லி: இந்திய ரயில்வேயில் நிதிப் பிரச்சினை நிலவுகிறது. இதைச் சரிக்கட்ட அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெறப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் பேசும்போது இதுகுறித்துக் கூறியதாவது:
மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தவறான நிதி கையாளுகை காரணமாகவே ரயில்வே பெரும் நிதி நெருக்கடியில் சிக்க காரணமாகியுள்ளது.
ரயில்வேயின் நிதி நிலைமையை முழுமையாக சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இனி வருங்கால ரயில்வே திட்டங்கள் அனைத்தும் அரசு - தனியார் கூட்டுத் திட்டமாக மாற்றியமைக்கப்படும்.
அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் இணைந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்களி்ன் முதலீடும் பெறப்படும்.
இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் 3700 கிலோமீட்டர் புதிய ரயில் பாதை அமைப்புப் பணிக்காக ரூ. 41,000 கோடியை செலவிட்டுள்ளது.
2015ம் நிதியாண்டில் செலவுத் தொகை ரூ. 1.49 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015ம் நிதியாண்டில் பயணிகள் கட்டணமாக ரூ. 44,600 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் கெளடா.
கடந்த ஆட்சியில் நாட்டின் எந்தத் துறையிலும் அன்னிய முதலீடு குறித்து அறிவிக்கப்பட்டாலும் அது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து மத்திய அரசு பேசியபோது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ரயில்வே திட்டங்களில் நேரடி அன்னிய முதலீடு குறித்து மோடி அரசு அறிவித்திருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முக்கியமான அரசுத் துறையான ரயில்வேயில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவது என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது. இருப்பினும் இந்த அன்னிய முதலீடுகள் ரயில்வேயின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளது. மற்றபடி ரயில் சேவைகளில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.