"ஸ்வச் பாரத்"தை மறந்துட்டோமே... சுதந்திர தின விழாவுக்குப் பிறகு குப்பைக்காடான செங்கோட்டை!
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் குப்பைத் தொட்டி வைக்காததால் செங்கோட்டை குப்பைக்காடாக மாறியுள்ளது.
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா முடிந்த பிறகு தண்ணீர் பாட்டில்களும், வாழைப் பழ தோல்களும் ஆங்காங்கே சிதறி குப்பைக் காடாக காட்சியளிக்கிறது.
இந்தியாவின் 72 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். சுதந்திர தின விழாவில், முன்னாள் பிரதமர்கள், தேவகவுடா, மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பின்னர் உரையாற்றினார். சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னர், விழாவைக் காண வந்திருந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஆங்காங்கே அவர்கள் விட்டுச் சென்ற காலி தண்ணீர் பாட்டில்கள், வாழைப் பழ தோல்கள், காகிதங்கள் என சிதறி குப்பைக் காடாக காட்சியளிக்கிறது.
மத்திய அரசு தூய்மை இந்தியா என்று நாடு முழுவதும் தூய்மையை வலியுறுத்தும்போது, செங்கோட்டையில் அதுவும் சுதந்திர தின விழாவில் இப்படி குப்பையாக்கி இருப்பது அனைவரையும் வருத்தம் அடையச் செய்தது.
இது குறித்து செங்கோட்டையில், சுதந்திர தின விழாவில் மாணவர்களுடன் கலந்துகொண்ட ஆசிரியை நமிதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பிரதமர் தூய்மையையும் சுகாதாரத்தையும் வலியுறுத்தும்போது, சுதந்திர தின விழாவில் காலி தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளைப் போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யாமல் இருந்தது வியப்பாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
விழாவில் கலந்துகொண்ட மற்றொரு ஆசிரியை ரஷ்மி குஹா கூறுகையில், "மொத்த பகுதியும் குப்பைக்காடு போல காட்சி அளித்தது. குப்பைகளைப் போடுவதற்கு ஏன் அவர்கள் குப்பை தொட்டிகளை வைக்க ஏற்பாடு செய்யவில்லை என்பது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. காலையில் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் மற்றும் திண்பண்டங்கள் விநியோகிக்கப்பட்டன. அங்கே குப்பைத் தொட்டி இல்லாததால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்கள் அவற்றையெல்லாம் அவர்கள் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினவிழாவில் செங்கோட்டை குப்பையாகி உள்ள நிலையில், மத்திய அரசு அண்மையில் செங்கோட்டை பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.