ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி... அடிதடி ஒரே ரகளை!
பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி செய்து விற்பனையில் ஈடுபட்டதாக ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் அடிதடி ரகளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த அரிசி மூட்டையை அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நந்தவனம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் நேற்று முன்தினம் கடையில் அரிசி வாங்கி சமைத்தார். அந்த சாதத்தை சாப்பிட்டபோது, வாயில் ஒட்டிக்கொண்டதாகவும், வித்தியாசமான சுவையில் இருந்ததாகவும் உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்தார். எனவே, இது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்று கருதிய அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல் தனியார் விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹைதராபாத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் தெரிவித்ததால், அதனை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
ஆய்வு முடிவுகள் இன்று கிடைக்கும். அதன்பிறகே அவை பிளாஸ்டிக் அரிசியா இல்லையா என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாக கூறி, அந்தக் கடைக்காரரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காயம் அடைந்த கடைக்காரரை போலீசார் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் அரசி விற்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.