அடப்பாவிகளா.. பிளாஸ்டிக் அரிசி, முட்டை வரிசையில் சர்க்கரையிலும் கை வெச்சுட்டாங்க!
பிளாஸ்டிக் முட்டையை தொடர்ந்து அரிசி, சர்க்கரையிலும் கலப்படம் செய்யப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பெங்களூரு: நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சர்க்கரையை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சர்க்கரையில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
பாலிஸ் பிளாஸ்டிக் வாசனை
ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து கொதிக்கும் பாலில் சர்க்கரையை போட்டுள்ளார். அப்போது பிளாஸ்டிக் உருகி வாசனை வந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்தஅந்த பெண் சர்க்கரையை கீழே கொட்டி பார்த்தபோது வெள்ளை மணிபோன்ற பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வாடிக்கையாளர்கள் கொதிப்பு
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அந்த மளிகைக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஞ்சு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மளிகை கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சமரசம் செய்த அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சர்க்கரை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வுக்கு உத்தரவு
போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சர்க்கரை மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.
மாநிலம் முழுவதும் புகார்
இதுகுறித்து கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை தொடர்பாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைக்கப்பட் டுள்ளது.
கலப்படம் எங்கே?
இக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிளாஸ்டிக் சர்க்கரை எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்றும் எங்கு கலக்கப்படுகிறது என்றும் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பீதி
பிளாஸ்டிக் முட்டை விற்பனை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை விவகாரம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் பிளாஸ்டிக் வரப்போகுதோ?