கிரிக்கெட் பிக்ஸிங் போல, அதிர வைக்கும் ரயில்வே பிளாட்பார்ம் பிக்ஸிங்! என்ன நடக்குது பாருங்க
ரயில்நிலையங்களில் வியாபாரிகளுடன் இணைந்து ரயில்வே ஊழியர்களும் பிளாட்பார்ம் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவதை ரயில்வேத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video
பாட்னா: ரயில்நிலையங்களில் உள்ள வியாபாரிகளுடன் இணைந்து ரயில்வே ஊழியர்கள், எந்த ரயில் எந்த பிளாட்மார்பில் வரவேண்டும் என்ற பிளாட்பார்ம் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவதை ரயில்வேத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பீகாரில் ரெயில் நிலையங்களை வந்தடையும் ரெயில்கள் குறிப்பிட்ட பிளாட்பார்மை அடைய வேண்டும் என்பதற்காகதான் 'பிளாட்பார்ம் பிக்ஸிங்' நடக்கிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை சுவாசமாக நினைக்கும் நம் இந்தியர்களுக்கு கிரிக்கெட் பிக்ஸிங் என்றால் நன்றாக தெரியும், அதனால் இந்த பிளாட்பார்ம் பிக்ஸிங்கை விளக்க வேண்டிய அவசியமில்லை
வியாபாரிகள் ரெயில்வரும் பிளாட்பார்மை நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரெயில் நிலையத்தில் வியாபாரிகள், விற்பனையை அதிகரிக்க ரெயில்வே அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பிக்ஸிங் போல..
முன்பே முடிவெடுத்து அந்த முடிவுக்கு தகுந்தார் போல விளையாடுவது தான் கிரிக்கெட் பிக்ஸிங். ஆனால் அவுட்டோ, சிக்சோ, கேச்சோ அகஸ்மாத்தாக தற்செயலாக நடந்தது போல தான் தெரியும். ஆனால் எல்லாமே திட்டமிட்டபடி தான் நடக்கும். அதுதான் பிக்ஸிங்
பிளாட்பார்ம் பிக்சிங்
ரயில்நிலையத்தில் ஒரு ரயில் வரும் பிளாட்பார்ம் என்பது கடைசி சில நிமிடங்களுக்கு முன்பு தான் கூறப்படும். எந்த டிராக் ப்ரீயாக இருக்கு என்பதை பார்த்து தான் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், ரயில் ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் பிளாட்பார்ம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். இந்த செயல்முறையை தான் வியாபாரிகள் பிக்ஸிங்காக மாற்றி விட்டனர். இதுதான் "பிளாட்பார்ம் பிக்ஸிங்"
பிளாட்பார்ம் வியாபாரிகள்
ரயில்நிலையத்தில் ஏராளமான பிளாட்பார்ம்கள் இருப்பது வழக்கம். அதுவும் பிரபலமான ரயில்நிலையங்கள் என்றால் குறைந்தது 10லிருந்து 15 பிளாட்பார்ம்கள் இருப்பது வழக்கம். இந்த பிளாட்பார்ம்களில் ஏராளமான கடைகள் இருப்பது வழக்கம். இவர்கள் ரயிலுக்கு செல்லும், ரயிலிருந்து இறங்கும் அல்லது ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நம்பி தான் வியாபாரம் செய்து வருகின்றனர்
வியாபார மூளை
எந்த பிளாட்பார்மில் ரயில் நிற்கிறதோ அந்த பிளாட்பார்மில் உள்ள வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் தான். இதர பிளாட்பார்மில் உள்ள வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இது சில காலங்களுக்கு முன்பு நடந்த காட்சிகள். ஆனால் இப்போது இந்த வியாபாரிகள் தான் ரயில் வரும் பிளாட்பார்மையே முடிவு செய்கின்றனர்.
வியாபாரம் ஜோர்
ரயில் எந்த டிராக்கில் வந்தால் என்ன இதில் என்ன கிடைத்து விடப்போகிறது என்று நினைக்கிறீர்களா. அப்படி நினைத்தால் அது உங்களின் அறியாமை, ஒரு பிளாட்பார்மில் ஒரு ரயில் வந்து நின்றால், அதிலிருக்கும் ஆயிரம் பயணிகளில் 500 பேர் ஒரு டீ வாங்கினால் யோசித்து பாருங்கள். ஒரு டீயின் விலை 10 ரூபாய், அப்போ 5000 ரூபாய் வியாபாரம். இது இல்லாமல் திண்பண்டங்கள், கூல்டிரிங்க்ஸ், உணவு என வியாபாரம் பல ஆயிரங்களை தாண்டும். ஒரு ரயிலுக்கே இப்படி என்றால் ஒரு நாள் முழுவதும் வரும் ரயில்களில் எவ்வளவு வியாபாரம்.
அதிகாரிகளுக்கு லஞ்சம்
இப்படி மல்டி லேக் பிசினஸை முடிவு செய்வது ரயில் நிற்கும் பிளாட்பார்ம்கள் தான். இதைத்தான் வியாபாரிகள் முடிவு செய்து பிளாட்பார்ம் பிக்ஸிங் செய்கிறார்கள். இதற்கு துணையாக ரயில்நிலைய ஊழியர்களும் செயல்படுவதால் அவர்களுக்கு லஞ்சமும் தரப்படுகிறது. நூறு ரூபாயில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ரூபாய் வரை லஞ்சம் வழங்கப்படுகிறது
சிக்கவைத்த ஆடியோ
இந்த பிளாட்பார்ம் பிக்ஸிங் தொடர்பாக ரயில்நிலைய அதிகாரியும், வியாபாரிகளும் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று தான் இந்த விவகாரத்தையே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுமட்டுமில்லாமல் கடைசி நேரத்தில் பிளாட்பார்ம் மாற்றப்படுவதாக பயணிகள் அளித்த புகாரும் ரயில்வே அதிகாரிகளை சந்தேகமடையவைத்துள்ளது
வடமாநிலங்களில் பிக்ஸிங்
இந்த பிக்ஸிங் வடமாநில ரயில்நிலையங்களில் அமோகமாக நடைபெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீகார், ஒடிசா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் வியாபாரிகள் டான்களை போல செயல்படுவதாகவும், பல நேரங்களில் ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் கிளம்ப விடாமல் கூட தடுத்து நிறுத்தும் அளவிற்கு வியாபாரிகளின் அராஜக போக்கு எல்லை மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது
விசாரணைக்கு உத்தரவு
இந்த பிளாட்பார்ம் பிக்ஸிங்-கால் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக செல்வதாகவும், பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாகவும் தெரியவந்ததை தொடர்ந்து விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைக்கு ரயில்வேத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரயில்நிலையங்கள்
தற்போது வடமாநிலங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த பிளாட்பார்ம் பிக்ஸிங் தென்னக ரயில்நிலையங்களிலும் பரவியுள்ளதா என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்று வருகிறது. காரணமில்லாமல் அதிகநேரம் ரயில்நிலையங்களில் நிறுத்தப்படும் ரயில்கள், ஈக்களை போல பயணிகளை முய்க்கும் வியாபாரிகள், தேவையில்லாத காலதாமதம், இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம் ஊருக்கும் இந்த பிளாட்பார்ம் பிக்ஸிங் வந்துவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கிறது