125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இந்திய பார்கவுன்சில் அறிவிப்பு
டெல்லி: 125 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட்டை இந்திய பார்கவுன்சில் முழுமையாக ரத்து செய்துள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதால் பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராடியதால் 125 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு பார் கவுன்சில் அறிக்கை திருப்தி அளித்ததால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து என விளக்கம் அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை கண்டித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போராட்டத்தை ஜூலை 22ம் தேதிக்குள் விலக்கிக்கொள்ளவில்லை என்றால் தொடர்புடைய வழக்கறிஞர்கள சங்க நிர்வாகிகள் மற்றும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஜூலை 25 திட்டமிட்டபடி உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் முழு அமர்வு கூட்டத்தில் புதிய விதிகளின் படி எந்த வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்க குழு நிர்வாகிகள் திருமலைராஜன், சிவசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலர் அறிவழகன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நளினி உள்ளிட்ட 125 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்தது.
சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து வழக்கறிஞர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய வழக்கறிஞர்களின் நன்னடத்தை உள்ளிட்ட விவரங்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு எதிரான எவ்வித செயல்களிலும் ஈடுபடவில்லை என தமிழ்நாடு பார்கவுன்சில் இந்திய பார்கவுன்சிளுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழக பார்கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று 125 வழக்கறிஞர்கள் மீதான பணி இடைநீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து, வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பி, தற்போது நீதிமன்ற பணிகள் சுமூகமாக நடப்பதாக தமிழ்நாடு பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.