மனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்? எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரளா ஆளுநரும் முன்னாள் தலைமை நீதிபதியுமான பி. சதாசிவத்தை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அனைத்திந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற போது தாம் சட்டப் பணி தொடர்பான அமைப்பில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா அரசு 7 மாதங்களுக்கு முன்பு சதாசிவத்தை கேரளா ஆளுநராக நியமித்தது.
இருப்பினும் கடந்த ஓராண்டுகாலமாகவே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவம் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களாகவும் சதாசிவத்தையே மனித உரிமைகள் கமிஷன் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்து அனைத்து இந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவத்தை மட்டுமே நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஒரே முடிவாக இப் பதவிக்கு சதாசிவத்தை மத்திய அரசு தேர்வு செயது தவறு... மத்திய அரசின் இம்முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.
தமது பதவியை தவறாகப் பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக தமிழக அரசிடம் இருந்து தனது மகனின் மாமியாருக்கு நிலத்தைவாங்கி மருமகள் பெயரில் மாற்றியவர் சதாசிவம். கோவையில் தன் மகனுக்கு மாருதி கார் ஏஜென்சி உரிமை பெறுவதற்காக ரூ 5 கோடி டெபாசிட் செலுத்தாமல் விலக்கு பெற்றவர் சதாசிவம்..
தற்போது கேரளா ஆளுநராக இருந்து வருகிறார்.. அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தால் அவர் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையைத்தான் மேற்கொள்வார்.. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு சுதந்திரமாக செயல்படக் கூடிய ஒருவர்தான் அவசியம்..
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளாக இருந்த ஆர்.எம்.லோதா, அல்டமாஸ் கபீர், கபாடியா ஆகியோரது பெயர்களை பரிசீலிக்காமல் சதாசிவத்தை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்திருப்பதும் இதற்கு சதாசிவம் ஒப்புதல் தெரிவித்திருப்பதும் முறையானது அல்ல. இதனால் சதாசிவம் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இம் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், எப்போது விசாரணை என்பதை ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.