சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்றக்கோரிய டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி!
சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூர்: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தும்கூர் நகரிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக சிறை விதிகளின்படிதான் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.