அன்னை தெரசா ஒரு புனித ஆத்மா.. அவரை விமர்சிக்காதீர்: கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லி: அன்னை தெரசா புனித ஆத்மா. எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் அன்னை தெரசா குறித்து கூறிய தகவல்களால் சர்ச்சை உண்டானது.
அதாவது, ‘அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. மத மாற்றத்துக்காக அவரது சேவை பயன்படுத்தப்பட்டது. மதமாற்றம் குறித்து தற்போது கேள்வி எழுப்பவில்லை. ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு (தன்னார்வ அமைப்பு), ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் ஓரே நோக்கமாக உள்ளது' எனப் பேசினார்.
இந்நிலையில், மோகன் பாகவத் பேசியது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘அன்னை தெரசாவுடன் நான் கொல்கத்தா ஆஸ்ரமத்தில் சில மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் மிக உயர்ந்தவர். அவரை விமர்சிக்க வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே மோகன் பாகவத்தின் பேசியது ஊடகங்களில் தவறாக திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக ஆர் எஸ் எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரினமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையனும் மோகன் பாகவத்தின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.