”இணையத்தைக் காப்பாற்றுவோம்” – ஏர்டெல் ஜீரோ திட்டத்திலிருந்து வெளியேறியது ”பிளிப்கார்ட்”!
டெல்லி: கடந்த சில நாட்களாக இணையத்தை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் பலர் போராடியதன் விளைவாக ஏர்டெல் ஜீரோ திட்டத்திலிருந்து வெளியேறுவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
இன்டர்நெட் என்ற தொழில் நுட்பம் உருவானதற்கு காரணமே உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் தகவல் தங்கு தடையின்றி எவ்வித பாகுபாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றுதான்.
அந்த வகையில், இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதுதான் இணைய சமத்துவம்.
இவ்வாறு பயணிக்கும் தகவல்களை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல்களை மக்கள் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ கூடாது என்பது இந்த இணைய சமத்துவத்தின் சாராம்சமாகும்.
ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. ‘ஸ்கைப்' உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டது. வாடிக்கையாளர் ஸ்கைப் மூலமாக வெளிநாட்டவர்களுடன் பேசினால் தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்ற சுய நலமே இதற்குக் காரணம்.
மேலும், இணையத்தில் எண்ணற்ற கோடிக்கணக்காண தளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒருசில தளங்களை மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம், மீதி தளங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில தளங்களுக்கு மட்டும் சலுகை வழங்கும் வகையில் ஏர்டெல் ஜீரோ என்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனுடன் பிளிப்கார்ட் நிறுவனமும் கை கோர்த்திருந்தது. முன்னரே பேஸ்புக்குடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனமும் இது போன்ற திட்டத்தை அறிவித்திருந்தது.
இணைய சமத்துவம் என்ற கோட்பாட்டிற்கு எதிரான இந்த செயலால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும், நாம் இணையத்தை பயன்படுத்தும் முறையை, எந்த தகவலை நாடுவது, எந்த தகவலை அடைய முடியாது என்பதை தீர்மானிப்பது தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கையில் சென்று விடும்.
தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைய சேவையை கொடுப்பதற்குத்தானே தவிர, நாம் எந்த தளத்தை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்பதற்கல்ல.
இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி "சேவ் தி இன்டர்நெட்" என்ற இணைய போராட்டம் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய்க்கு இணைய சமத்துவத்தை ஆதரித்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனத்துடன் கை கோர்க்க இருந்த பிளிப்கார்ட் விலகுவதாக அறிவித்துள்ளது.