டெல்லியில் துப்பாக்கி முனையில் 'சுடப்பட்ட' ரூ. 7 கோடி... ஐபிஎல் சூதாட்டப் பணமா?.. பரபர தகவல்கள்!!
டெல்லி: டெல்லியில் துப்பாக்கி முனையில் நடந்த துணிகரத் திருட்டில் களவு போன ரூ. 7.69 கோடி பணம், ஐபிஎல் பெட்டிங்குடன் சம்பந்தப்பட்ட பணம் என்ற சந்தேகம் டெல்லி காவல்துறைக்கு எழுந்துள்ளது.
திருடப்பட்டது ரூ. 7 கோடிதான் என்றாலும் கிட்டத்தட்ட ரூ. 15 முதல் 20 கோடி வரை கொள்ளை போயிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
இதுதொடர்பாக ராஜேஷ் கல்ரா என்பவர் சிக்கியுள்ளார். அவரது பணம் கொள்ளையடிக்கப்ட்டது. ஆனால் இவர் சூதாட்ட புக்கி என்பதால் போலீஸார் இவரைத் திருக ஆரம்பித்துள்ளனர்.
மூல்சந்த் பாலத்திற்குப் பக்கத்தில்
தெற்கு டெல்லியில் உள்ள மூல்சந்த் பாலத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமையன்று துணிகர முறையில், துப்பாக்கி முனையில் ரூ. 7.69 கோடி பணம் திருடப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
என் பணம்.. என் பணம்
போலீஸ் விசாரணையில் இந்தப் பணம் தன்னுடையது என்று தெற்கு டெல்லியைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஷ் கல்ரா உரிமை கோரினார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது இது ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்ட புக்கிகளுக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்ற விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
அது போயிருக்கும்.. ரூ. 20 கோடி வரை
அதை விட முக்கியமாக திருட்டுப் போன பணத்தின் உண்மையான மதிப்பு ரூ. 15 முதல் 20 கோடி என்றும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணம் கல்ராவுக்கு மட்டுமல்லாமல், அவரது பார்ட்னர் ராகுல் அஹுஜாவுக்கும் சொந்தமானது என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பயங்கரமான புக்கி
இருப்பினும் திருட்டுப் போனது ரூ. 7.69 கோடி மட்டுமே என்று கல்ரா சாதிக்கிறார். கல்ராவே ஒரு கிரிக்கெட் சூதாட்ட புக்கிதான். இவர் ஏற்கனவே மறைந்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹன்சி குரோனி மீதான கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் 2000மாவது ஆண்டு சிக்கியவர் ஆவார்.
பலருடன் நெருக்கம்
கல்ராவின் தொலைபேசி அழைப்புகளை போலீஸார் பரிசோதித்தபோது அவருக்கு பல முக்கிய புக்கிகளுடன் நெருக்கமான தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கும் ஜூபிடர் என்கிற சந்திரேஷ் ஜெயின் என்கிற பிரபலமான புக்கியுடன் நெருக்கமான நட்பு உள்ளது. இவர் ஒரு நகைக்கடைக்காரர். ஜெய்ப்பூரில் இருக்கிறார். இதேபோல லண்டனைச் சேர்ந்த இன்னொரு புக்கியான சஞ்சீவ் சாவ்லாவுடனும் கல்ராவுக்குத் தொடர்பு உள்ளது.
ஜெய்ப்பூருக்கு ஒரு படை
இதையடுத்து தற்போது ஜெய்ப்பூருக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பெட்டிங் கும்பலுக்கும் இந்தப் பணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கல்ரா பேசுவதில் உண்மை இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது என்றனர்.
வின்டு ஓட்டிய ஜாகுவார்.. கல்ராவுடையதாம்
மேலும், போலீஸாருக்கு தற்போது இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது கடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கி கைதான நடிகர் வின்டு தாரா சிங் பயன்படுத்திய ஜாகுவார் கார், கல்ராவுக்குச் சொந்தமானது என்று இப்போது தெரிய வந்துள்ளதாம். அந்தத் தகவலை போலீஸார் தற்போது பரிசோதித்து வருகின்றனர்.
புக்கிகளுக்குப் பண பாக்கி..
கடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் இன்னும் பணம் கொடுக்கப்படாமல் நிலுவையில் வைத்துள்ளனராம். இந்தப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், பணம் கிடைக்கப் பெறாத புக்கிகள் சிலரே இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். கல்ராதான் நிறையப் பேருக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
வலுக்கும் சந்தேகம்
ஆரம்பத்தில் ரூ. 6 கோடி திருடப்பட்டதாகத்தான் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது அதிகரித்து ரூ. 15 முதல் 20 கோடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குப் போலீஸார் வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பணமும்
இந்தப் பணத்தில் இந்தியப் பணம் மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பணமும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் வரும் நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.