கொச்சியில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் நாளை முப்படை தளபதிகள் மாநாடு- மோடி பங்கேற்பு
கொச்சி: கொச்சி கடற்பரப்பில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் முப்படை தளபதிகளின் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
நாட்டின் முப்படை தளபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இதனை மாற்றி டெல்லிக்கு வெளியே முப்படைத் தளபதிகளின் மாநாடு நடைபெற வேண்டும் என்ற யோசனையை கடந்த ஆண்டு பிரதமர் மோடி முன்வைத்திருந்தார்.
டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முப்படை தளபதிகளின் மாநாட்டின் போது இந்த கருத்தை மோடி முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முப்படைத் தளபதிகளின் மாநாடு கொச்சி கடற்பரப்பில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் நாளை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு முப்படைத் தளபதிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்காலத்தில் பாதுகாப்புகுறித்த சவால்கள் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால் எதிரிகள்தான் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். ஆகையால் அவர்களை சமாளிக்க முப்படைகள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. தொழில் நுட்ப முன்னேற்றம் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். கணிணி மற்றும் இணைய ஆதிக்கம் ஆகியவற்றால் கடல், வான்வெளி, நிலங்களின் வழியாக எல்லைகளை கண்காணிப்பது சிரமமாக அமையும் என கூறியிருந்தார்.
மேலும் டிஜிட்டல் தொழில் நுட்பம் ராணுவப் பிரிவிலும் தேவை எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். நாளை நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமான சவால்களை எதிர்நோக்குவது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தக் கூடும்.
இது தொடர்பாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா நமது ஒன் இந்தியாவிடம் கூறுகையில், பிரதமர் மோடியுடன் இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், மூத்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பின்னர் அவர் பங்கேற்கும் முதலாவது முப்படை தளபதிகளின் மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.