திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் முடிக்க வேண்டும்: மோடி
டெல்லி: திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஒ.) முடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பின் சார்பில் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விருதுகளை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாதுகாப்பு துறையில் தொழில்நுட்பம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. ஆனால் இத்துறையில் நமது நாடு பின்தங்கியுள்ளது.
நவீன சாதனங்கள்
நாம் ஒரு திட்டத்தை முடிக்கும் முன்னரே, அதை விட 2 மடங்கு நவீன சாதனம் சந்தைக்கு வந்து விடுகிறது. இதுதான் இந்தியாவின் முன்பு நிற்கும் சவாலாகும். இதனால் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே, திட்டங்களை எப்படி முடிப்பது என்பதை ஆராய வேண்டும்.
விரைந்து பணியாற்றுதல் முக்கியம்
திறமை வாய்ந்தவர்களுக்கு இந்தியாவில் பற்றாக்குறை கிடையாது. ஆனால், விரைந்து பணியாற்றும் திறன்தான் இல்லை.
இப்படி செயல்படனும்
உலக நாடுகள் சில சாதனங்களை 2020ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வருகின்றன என்றால், அதை நாம் 2018ஆம் ஆண்டிலேயே தயாரித்து களத்தில் வைத்திருத்தல் வேண்டும். யாரையும் பின்பற்றினால் நமது நாடு, உலகின் தலைவராக முடியாது.
எதிர்பார்ப்புகள் அதிகம்
உலக நாடுகளுக்கு வழிகாட்டினால் மட்டுமே தலைவராக முடியும். எனது அரசு மீது அதிக எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் வைத்திருப்பதாக நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
பணிபுரிவர் மீதே நம்பிக்கை
தங்களுக்காக பணியாற்றுபவர்கள் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். எந்தவித பணியையும் செய்யாதவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
இளைஞர்களுக்கு பொறுப்புகள்
இளைஞர்களுக்கு அதிக அளவில் டி.ஆர்.டி.ஒ. பொறுப்புகளை வழங்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் 52 பேரில், 5 பேர்களை 35 வயதுக்கும் குறைவானவர்களை நியமிக்க வேண்டும்.
முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இளைஞர்களிடம் நாம், உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும்' என்று தெரிவிக்க வேண்டும். இளைஞர்களிடம் அதிக திறமை உள்ளது. நிச்சயம் அவர்கள் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள்.
படையினரிடம் கருத்து கேட்பு
பாதுகாப்பு தளவாட சாதனங்களை தயாரிக்கும் முன்னர், அதுகுறித்து பாதுகாப்பு படையினரின் கருத்துகளை கேட்டறிய வேண்டும்.
ஏனெனில், அவர்கள்தான் அதை பயன்படுத்தப் போகிறார்கள். பாதுகாப்பு துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை டி.ஆர்.டி.ஒ. நடத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.