டிவிட்டரில் மட்டுமே மோடியைப் பார்க்க முடிகிறது.. குலாம் நபி ஆசாத் கிண்டல்
ஜம்மு: பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பார்க்க முடிவதில்லை. டிவிட்டர் பக்கம்தான் அதிகமாக பார்க்க முடிகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஜம்மு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் தற்போதைய நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய பாஜக அரசின் இந்தச் சட்டத் திருத்தம், அம்பானிகளுக்கு பலனளிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தால் அதானி குழுமத்துக்கு பலன் கிடைக்கும். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்.
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பார்க்க முடியவில்லை. அவரை அதிகமாக டிவிட்டர் பக்கத்தில்தான் காண முடிகிறது என்றார் குலாம் நபி ஆசாத்.