புனேவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசுகையில், " ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிநவீன வசதிகள் மற்றும் வளர்ச்சியின் மையமாக இருக்கும். கழிவு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சாலைகளின் அகலம் மற்றும் கட்டிடங்களை வைத்தே நகரங்கள் மதிப்பிடப்படுகின்றன.
நகரங்கள் ஏழைகளை ஏற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன. எனவேதான் கிராமங்களில் இருக்கும் மக்கள் நகரங்களில் குடியேறுகிறார்கள். ஒரு காலத்தில் நகரமயமாதல் பிரச்சனையாக கருத்தப்பட்டது. ஆனால் நான் இதை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று கூறுகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெரும்பான்மை மக்களின் திட்டம், இது வெற்றிகராமக செயல்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.