பிரதமர் மன்மோகன்சிங் பிரியாவிடை உரை!! மோடி பெயரை சொல்லாமல் வாழ்த்து!!
டெல்லி: தனது வாழ்க்கையும் பதவிக் காலமும் திறந்த புத்தகமாக இருந்தது; கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வலிமைப்படுத்தியிருக்கிறேன் என்று நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன்சிங் என்று தெரிவித்தார். தமது இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மன்மோகன்சிங் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வென்று புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று தமது பதவியை பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய இருக்கிறார்.
அவர் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை கொடுத்து இன்று ஆற்றிய உரை:
நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு கடைசியாக உங்களிடம் உரையாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பொறுப்பை ஏற்றேன். என்னைப் பொறுத்தவரையில் மிக சரியான முறையில் செயலாற்றினேன்.
இன்று நான் பதவி விலகுகிறேன். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே பதவி விலக முடிவு செய்தேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையும் பதவிக் காலமும் திறந்தவெளி புத்தகம் என்பதை எப்போதும் கூறி வருகிறேன். நான் இந்த நாட்டுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வலிமைப்படுத்தியுள்ளோம். அதற்காக பெருமைப்படுகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இன்று இந்திய நாடு வலிமையான நாடாக இருக்கிறது. இது உங்கள் அனைவராலும்தான் சாத்தியம்.
நான் பதவி விலகினாலும் உங்களுக்கான சேவையாற்றியது எனது நினைவுகளில் இருக்கும். எதிர்கால இந்தியா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு மன்மோகன்சிங் உரையாற்றினார்.
இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மன்மோகன்சிங் சொல்லவே இல்லை. அவரது சொல்லாமலேயே புதிய அரசுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.