வாஜ்பாய் இறுதி ஊர்வலம்.. தொண்டர்களோடு தொண்டராக 4 கி.மீ. நடந்தே சென்ற மோடி!
Recommended Video
டெல்லி: வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில், சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.
உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். இரவில் டெல்லியிலுள்ள அவர் இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு, வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு, காலை 9 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அங்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக சென்று வாஜ்பாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மதியம் 2 மணிக்கு, தேசிய கொடி போர்த்தப்பட்ட வாஜ்பாய் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது. அங்கிருந்து விஜய்காட்-ராஜ்காட் பகுதிக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது.
அங்கு ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பாஜக அலுவலகம் மற்றும், ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் நடுவேயான தூரம், 4 கி.மீயாகும். இருப்பினும், வாஜ்பாய் உடல் செல்லும் வாகனத்தின் அருகே, பிரதமர் நரேந்திர மோடி நடந்தபடியே, சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் அவருடன் நடந்து சென்றார். தங்கள் தலைவர் வாஜ்பாய் மீது வைத்திருந்த அளப்பறிய மரியாதை காரணமாக, காரை தவிர்த்துவிட்டு, தொண்டர்களோடு, தொண்டர்களாக மோடியும், அமித்ஷாவும் நடந்து சென்றனர்.
மு.க.கருணாநிதி மறைவின்போது ராஜாஜி ஹால் முதல், மெரினாவிலுள்ள அண்ணா சமாதி வரை, நடந்த இறுதி ஊர்வலத்தின்போது, சுமார் 2 கி.மீ தூரத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்றார் என்பது நினைவிருக்கலாம்.