வங்கதேசத்திற்கு ரூ.12,800 கோடி கடனுதவி !! பிரதமர் மோடி அறிவிப்பு!!!
டாக்கா : வங்கதேசத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவியுடன் தற்போது புதிதாக ரூ.12,800 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் வங்கதேசத்திற்கு சென்றனர். அங்கு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
பின்னர் உரையாற்றிய மோடி, இரு நாட்டு எல்லை பிரச்னையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். வலுவான தெற்காசியாவை உருவாக்க இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்படும் என்றும், பாதுகாப்பு, வளர்ச்சி , மதச்சார்பற்றத் தன்மைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
41 ஆண்டுகால எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.
வங்கதேசத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவியுடன் தற்போது புதிதாக ரூ.12,800 கோடி கடனுதவியையும் அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் கடலோர பாதுகாப்பு, மனித உரிமை மீறலை ஒழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் போலியாக புழங்கும் இந்திய கள்ள நோட்டுக்களை ஒழிப்பது உள்ளிட்டவைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு துறைகளில் 22 ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின.
வங்கதேசத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிடம் தெரிவித்தார்.