நமது கனவுகளை முன்னெடுத்துச் செல்ல வாழும் கலை அவசியம்: உலக கலாசாரா விழாவில் மோடி பேச்சு
டெல்லி: டெல்லியில் யமுனை கரையோரத்தில், வாழும் கலை அமைப்பின் சார்பில் நடைபெறும் உலக கலாசாரத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் நேற்று முதல் 13ம் தேதி வரை, ‘உலக கலாசார திருவிழா' நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் பட்நாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பொருளாதார ரீதியாக மட்டும் உலகம் இணைந்திருக்கவில்லை. இப்போது கலாசார ரீதியாகவும் உலகம் ஒன்றிணைந்துள்ளது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இந்த உலகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. உலகம் முழுவதும் இந்தியாவின் பாரம்பரியத்தை பரவச்செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எனது பாராட்டுக்கள்.
நமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு குறித்து நாம் நிச்சயமாக பெருமைப்பட வேண்டும். எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், நம்முடைய கலாசாரம் குறித்து நாம் பெருமைப்படாமல் இருக்கிறோம் என்றால் இந்த உலகம் ஏன் நம்மை இன்று உற்றுநோக்கிப் பார்க்கிறது? வாழும் கலை வாயிலாக இந்தியாவை உலகம் அறிந்து கொண்டுள்ளது. நமது கனவுகளை முன்னெடுத்துச் செல்ல வாழும் கலை அவசியம்
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மங்கோலியாவுக்கு நான் சென்றிருந்தபோது வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஒரு குடும்பம் என்னை வரவேற்றிருந்ததை என்னால் மறக்க முடியாது. சர்வதேச உறவுகளை மேம்படுத்த இதுபோன்ற ஒரு கலாசார திருவிழா முக்கியமானது. இந்த நிகழ்வை கலாசாரங்களின் கும்பமேளாவாகவே நான் பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.