ஆஹா.. சுதந்திர இந்தியாவில் இப்படி கூட்டம் கூடியதில்லை.. அசாமில் மோடி வியப்பு! ராகுலுக்கும் குட்டு
கவுகாத்தி: தாய்மார்கள், சகோதரிகளால் நான் பாதுகாக்கப்படுகிறேன். எனவே, நான் எந்தவொரு 'கம்புக்கும்' அஞ்சத் தேவையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடோ பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் போடோலாந்து என்ற தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற அமைப்பு வெகு நீண்டகாலமாக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது. அந்த அமைப்பின் பல்வேறு போடோ குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தன.
சமீபத்தில் அந்த அமைப்புடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்டிஎப்பி இடையே, ஜனவரி 27ம் தேதி, முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர், என்டிஎப்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள், அசாம் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. ராகுலை அவையிலேயே மறைமுகமாக தாக்கிய மோடி!
போடோ ஒப்பந்தம்
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இன்று அசாம் மாநில அரசு சார்பாக விழா நடக்கிறது. கோக்ராஜர் நகரில் இந்த விழா, மதியம் துவங்கியது. போடோ பழங்குடியின மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி இது என்பதால், தலைநகர் கவுகாத்தியை விட்டுவிட்டு, கோக்ரஜார் பகுதியில் விழாவுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியா
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: அசாம் மக்களின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நான் நிறைய பேரணிகளைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததில்லை. இது நிச்சயமாக சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் பேரணிகளில் ஒன்றாகும்.
|
புது அத்தியாயம்
நீங்கள் இங்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் கூடியுள்ளீர்கள். இதை பார்க்கும்போது, என்னை பலமானவனாகவும், அச்சமற்றவனாகவும் உணர்கிறேன். உங்கள் அன்பு மற்றும் பாசத்தால் நான் பாதுகாக்கப்படுகிறேன். தாய்மார்கள், சகோதரிகளால் நான் பாதுகாக்கப்படுகிறேன். எனவே, நான் எந்தவொரு 'கம்புக்கும்' அஞ்சத் தேவையில்லை. இந்த நாட்டில் இனிமேலும் வன்முறைக்கு இடம் இல்லை. வட கிழக்கு மாநிலங்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புது அத்தியாயம் போடோ ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
ராகுல் காந்தி
சமீபத்தில் டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில், பிரதமர் வெளியே வர முடியாத நிலை ஏற்படப் போகிறது. வேலை கிடைக்காத இளைஞர்கள் கோபத்தில் உள்ளனர். அவர்கள், கம்பால் மோடியை அடிக்க தயங்கமாட்டார்கள் என்று கூறியிருந்தார். இதற்குத்தான், மோடி இவ்வாறு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.