"எனக்கும் நிதீஷ்குமாருக்கும் இடையே சிண்டு முடிகிறார் மோடி... ஸ்கூல் பாய் போல் புகார் சொல்லும் லாலு
பாட்னா : பீகார் மக்களை திசை திருப்பி எனக்கும் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இடையே சண்டையை மூட்டிவிட பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்வதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
எங்களை பிரிக்கும் மோடியின் முயற்சி பலிக்காது என்றும் லாலு பிரசாத் கூறியுள்ளார்.இதுபற்றி லாலு பிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
மோடி பீகார் மக்களை தவறாக வழிநடத்த பார்க்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் பீகாருக்கு எவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்வோம். ஆனால் இதை மோடி பாராட்டுகிறார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் எங்களை பிரிக்க முயற்சி செய்கிறார் என்று.
ஆனால், இதற்கு பீகார் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். மோடி பீகாருக்கு எந்த சிறப்பு நிதியுதவியையும் கொடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு முறை அவர் இங்கு வரும்போதும் ஏதாவது ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டுத்தான் செல்கிறார். ஆனால், இதுவரை அதில் ஏதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றி இருக்கிறாரா என்றால் இல்லை.
இவ்வாறு லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியாக இணைந்து போட்டியிட உள்ளன.