சினிமாவில் போலீஸாரை கேலி செய்கிறார்களே.. மோடி வேதனை!
கவுகாத்தி: சாதாரண மக்களிடம் போலீஸ் குறித்த எண்ணத்தை சினிமா மோசமாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த போலீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு பின்னர் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் தேச சேவையில் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆயிரம் போலீசார் உயிரிழந்துள்ளது சாதாரணமானது அல்ல. அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடக்கூடாது. நாட்டிற்காக போலீசார் செய்த தியாகங்கள் நினைவு கூரப்பட வேண்டும். நாட்டிற்காக தியாகம் செய்ய போலீசாருக்கு இந்த நேரத்தில் நான் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீசாரின் நலன்கள் என்பது ஒரு பிரச்னை. போலீசாரின் குடும்பங்களின் நலன் முக்கியமானவை. எனவே, அவர்களின் நலனுக்காக திட்டங்கள் தேவைப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதொரு உளவு அமைப்பு அவசியமாகிறது.
ஸ்மார்ட் போலீஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறேன். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அதற்கென ஒரு இணைய தளத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது எனது திட்டம். அவற்றில், போலீசாரின் தியாகங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இது, போலீஸ் குறித்த மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். போலீஸ் நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டியது அவசியம். எனத் தெரிவித்தார்.
மேலும், சினிமா தொடர்பாக பேசும் போது, ‘சினிமா, போலீசாரை மிக மோசமாக சித்தரித்து காட்டுகின்றன. சாதாரண மக்களிடம், போலீஸ் குறித்த எண்ணத்தை சினிமா மோசமாக்கி வருகிறது. ஒரு சில தவறுகள் இருக்கலாம். அதைமட்டுமே ஹைலைட்டாக்குவது ஏன் என்று புரியவில்லை. இது குறித்து திரைப்படங்களை உருவாக்குபவர்களிடம் பேச வேண்டும். அதேநேரத்தில், போலீசாரும், குறைகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்,' என இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.