அப்பாடா... மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி.. "தாத்ரி படுகொலை" சம்பவம் வேதனை அளிப்பதாக கருத்து
டெல்லி: தாத்ரி படுகொலை மற்றும் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சிக்கு தடை போன்ற சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன; இதில் மத்திய அரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி உட்கொண்டதாக கூறி முகம்மது இக்லாக் என்ற இஸ்லாமிய பெரியவர் மதவெறி கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதேபோல், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி நடத்த மும்பையில் அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்விவகாரங்கள் குறித்து தொடர்ந்து மவுனம் காத்து வந்த பிரதமர் மோடி தற்போது இந்த சம்பவங்கள் வருத்தமளிப்பதாக 'ஆனந்தபஜார் பத்திரிகா' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சி எப்போதும் போலி மதச்சார்பின்மையை எதிர்க்கிறது. நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம்.
தாத்ரி சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி சகித்துக் கொள்ளாது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.
எதிர்க்கட்சிகள் இவற்றை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. தாத்ரி படுகொலை, குலாம் அலி நிகழ்ச்சிக்கு தடை போன்ற சம்பவங்களில் மத்திய அரசுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு தொடர்புமே இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.