மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு.. நிர்மலா சீதாராமன் உட்பட 4 பேர் கேபினெட் அமைச்சர்களானார்கள்!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் உட்பட 4 பேர் கேபினெட் அமைச்சர்களானார்கள். புதிதாக 9 பேர் பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் காலை 10.30 மணிக்கு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர். அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் தற்போது 72 அமைச்சர்கள் உள்ளனர். புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்க விழா நடந்தது. இதில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தனர்.
முன்னதாக, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த சூழ்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.
இதனால், மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரலாமென்றும், தம்பிதுரை, அதிமுகவைச் சேர்ந்த வேணுகோபால், வி. மைத்ரேயன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால் தற்போதைய மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அதிமுக்க இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.