ஒரு ரோடு போடுவதற்காக இரவு 10 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரிக்கு போன் போட்ட மோடி! பரபரப்பு தகவல்
புதுடெல்லி: திரிபுரா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலையை சீரமைக்கும் பணிக்காக இரவு 10 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை பிரதமர் மோடி போனில் அழைத்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரிக்கு கடந்த ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் பேசிய நபர், இப்போது உங்களிடம் பிரதமர் மோடி பேச விரும்புகிறார். இணைப்பை கொடுக்கட்டுமா? என்று அவரது சம்மதத்தையும் கேட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிக்கோ ஒன்றும் புரியவில்லை. சில நிமிடங்கள் கழித்தே இயல்பு நிலைக்கு திரும்பிய அதிகாரி, பதறியபடியே சரி என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடி போன் இணைப்பில் வந்துள்ளார். ஆனால் அதிகாரமாக எதையும் மோடி கூறவில்லையாம். இரவு 10 மணிக்கு போன் பேசுவதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டுதான் உரையாடலையே ஆரம்பித்துள்ளார்.
மோடி கூறுகையில் "மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இப்போதுதான் பேசி முடித்தேன். உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. மழை வெள்ளத்தில் இந்தியாவின் பிற பகுதிகளை திரிபுரா மாநிலத்துடன் இணைக்கும் தேசிய நெஞ்சாலை எண் 208-ஏ சேதமடைந்துவிட்டது. அதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளிம் பேசிவிட்டோம். அவர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்" இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
தொலைதூர மாநிலத்திலுள்ள, இளம் அதிகாரியான தன்னிடம், நாட்டின் பிரதமரே நேரடியாக பேசியதை அந்த அதிகாரியால் நம்பவே முடியவில்லை. அன்று இரவு முழுக்க தூக்கமே வரவில்லையாம்.
மறுநாள் காலை விடிந்ததும் அலுவலகம் சென்றார். அவருக்கு திரிபுர, அசாம் மற்றும் மத்திய அரசிடம் இருந்து செய்ய வேண்டிய பணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்திருந்தன. 15 கிமீ தூரம் சாலை சேதம் அடைந்து இருந்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்துக் கொண்டு சேதம் அடைந்த சாலையை பார்த்தார். அங்கு அசாம் அரசு சார்பில் 6 ஜேசிபிக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த 4 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. விரைவில் பணி முடிந்து சாலை திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 28ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அந்த ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்து நன்றி தெரிவித்தார். மேலும் டெல்லிக்கு வந்தால் பிரதமரை சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகமும் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறு குயுவோரா என்ற இணையதளத்தின் புஷ்பக் சக்கரவர்த்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மோடி ஆற்றத்தில் இந்தியாவில் நடந்த முக்கிய மாற்றம் எதுவும் உள்ளதா என்ற வாசகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அந்த பத்திரிகையாளர் இவ்வாறு கூறியுள்ளார். மோடி அரசு அமைந்த பிறகு இதுதான் மறக்க முடியாத சம்பவம். சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் தந்தையும், என் தந்தையும் நண்பர்கள். அவர் மூலம்தான் இத்தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.