புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும் : குஜராத்தில் மோடி காட்டம்
புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் மாட்டு வண்டியில் போகட்டும் என்று குஜராத்தில் மோடி விமர்சித்து உள்ளார்.
அகமதாபாத் : புல்லட் ரயில் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் போகட்டும் என்று பிரதமர் மோடி காட்டமாக குஜராத் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசி உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நர்மதா கரையோரம் இருக்கும் அமோத் நகரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அதில், மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து மோடி பேசியதாவது, மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை மத்திய அரசு, ஜப்பான் நாட்டு நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் குஜராத் மாநில மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த சிமெண்ட், இரும்பு, தொழிலாளர்கள் என அனைத்தும் இந்தியாவில் இருந்து தானே வருகிறது. நாம் அதை ஜப்பானிடம் இருந்தா வாங்குகிறோம். இதுவே இந்திய வர்த்தகத்திற்கும், வேலை வாய்ப்புக்குமான மிகப்பெரிய ஒப்பந்தம் அல்லவா?
எங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை கொண்டு வர விரும்பியது. ஆனால், அவர்களால் கொண்டுவர முடியவில்லை. காங்கிரஸ் அரசு அதற்கு அதிக செலவாகும் என்பதால் புறக்கணித்துவிட்டது. இதனால் தற்போது செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரும்பவில்லை. அதனால் இப்போது புல்லட் ரயில் திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. புல்லட் ரெயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும். அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று காட்டமாக பேசி உள்ளார் பிரதமர் மோடி.
மேலும், குஜராத்தில் உலகில் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவச்சிலை நிறுவப்படுகிறது. இதுவும் வளர்ச்சித் திட்டம்தான். இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர முடியும். இதனையும் பலர் விமர்சித்து வருகிறார்கள். எங்களை விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் எங்கள் செயல்களின் மூலம் விரைவில் பதில் சொல்லுவோம்.
குஜராத் கடல் பகுதியில் 1,300க்கும் மேற்பட்ட சிறு சிறு தீவுகள் திட்டுகள் உள்ளன. அவைகள் அனைத்தும் சிங்கப்பூரை விட பெரியவை. அவைகளை சிங்கப்பூர் போல் மாற்றும் திட்டம் உள்ளது. அதை நினைத்து பா.ஜ.க.,விற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசினார்.