மோடி பார்த்து இந்தா புடிங்க பதவின்னா.. வாங்கித்தான் ஆகனும்.. இதுதான் அதிமுக நிலைமை!!
மத்திய அமைச்சரவையில் அதிமுகவை இணைப்பது தொடர்பாக பிரதமர் மோடிதான் இறுதி முடிவெடுப்பார் என்கிறது டெல்லி தகவல்கள்.
டெல்லி: மத்திய அமைச்சரவையில் அதிமுக இணையுமா, எத்தனை பதவி கிடைக்கும் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது. உண்மையில் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது. பாஜக என்ன சொன்னாலும் செய்வது மட்டும்தான் அதிமுகவுடைய ஒரே வேலை என்று கூறுகிறார்கள்.
எனவே அதிமுகவை அமைச்சரவையில் சேர்ப்பதும், சேர்க்காமல் போவதும் பிரதமர் மோடியின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. அவர் பதவி கொடுத்தால் கமுக்கமாக வாங்கிக் கொள்வதை மட்டுமே அதிமுக செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேசமயம், அதிமுக தரப்பில் சிலருக்கு மத்திய அமைச்சராகி விட வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கிறதாம். தங்களால் முடிந்த அளவுக்கு லாபி செய்து பதவியைப் பிடிக்க அலை பாய்ந்தபடி உள்ளனராம்.
3 அணிகளும் முண்டியடிக்கின்றன
அதிமுகவின் 3 அணிகளுமே மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து டெல்லியின் 'நண்பேன்டா' ஆகிவிடலாம் என கணக்குப் போடுகிறது. குறிப்பாக தினகரன் அணியில் எம்.எல்.ஏக்கள் பாஜகவை விமர்சிக்கின்றனர். ஆனால் தினகரன் இதுவரை பாஜகவை விமர்சிக்காமலே மவுனம் காத்து வருகிறார். பாஜகவுடன் இணக்கமாக போவதைத்தான் தினகரனும் விரும்புவதாக கூறப்படுகிறது.
மவுனிகளாக தினகரன் எம்.பிக்கள்
தினகரன் அணியில் எம்.எல்.ஏக்கள்தான் அதிக அளவில் பேசுகின்றனர். ஆனால் எம்.பி.க்கள் யாரும் பேசுவதில்லை. எப்படியும் பாஜகவின் தயவு தேவை என்பதால் எதையும் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
மைத்ரேயன்
ஓபிஎஸ் அணியின் டெல்லி முகமாக இருப்பவர் மைத்ரேயன். பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். ஓபிஎஸ் அணியின் டெல்லி லாபிகளில் படுதீவிரமாக இருப்பவர். அதிமுக அணிகள் இணைப்பின் போதே மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி என பேச்சு அடிபட்டது.
வேணுகோபால், தம்பிதுரை
அதேபோல் லோக்சபா துணை சபாநாயகராக தம்பிதுரையும் மத்திய அமைச்சராவார் என கூறப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டியலில் வேணுகோபால் எம்.பி. பதவியும் அடிபடுகிறது.
சசிகலா புஷ்பா...
இந்த 3 அணிகள் அல்லாமல் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் தனி லாபியில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ஜாதகப்படி முதல்வர் பதவி தமக்குதான் என நம்பிக்கையோடு இருந்தாலும் இந்த முறை மத்திய அமைச்சரவை மாற்றத்தில் எப்படியும் பதவி வாங்கிவிடுவது என்பதில் படு தீவிரமாக இருப்பதால் தமிழகத்துக்கு பக்கம் அதிகம் வருவதே இல்லையாம் சசிகலா புஷ்பா. ஆக அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் இணணக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவது உறுதி என்கின்றன டெல்லி தகவல்கள்.