மார்ச் பொறக்கப் போகுது.. மோடியும் 3 நாடுகளுக்குக் கிளம்பத் தயாராகிறார்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, அடுத்து அமெரிக்காவில் நடைபெறும் அணு பாதுகாப்பு மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். மேலும் அவர் சவூதி அரேபியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சவூதி அரேபியாவுக்கு கடந்த 6 ஆண்டுகளில் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
மார்ச் 30ம் தேதி பிரஸ்ஸல்ஸ் கிளம்பிச் செல்கிறார் மோடி. அங்கு நடைபெரும் இந்திய - ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
ஐரோப்பாவின் முக்கிய பார்ட்னர்
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தூதர் டோமாஸ் கோஸ்லோவ்ஸ்கி கூறுகையில், ஐரோப்பிய யூனியனின் முக்கியப் பங்குதாரர் இந்தியா. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய பொருளாதார, சமூக கொள்கைகள் கவர்ச்சிகரமாக உள்ளன என்று கூறியுள்ளார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் ஆர்வமாக இருப்பதாகவும் டோமாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சந்திப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கியின் அன்டோலியாவில் நடந்த ஜி 20 மாநாட்டின்போது ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்களான ஜீன் கிளாடி ஜங்கர், டோனால்ட் டுஸ்க் ஆகியோரை மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.
வாஷிங்டன் பயணம்
பிரஸ்ஸல்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு 31ம் தேதி வாஷிங்டன் செல்கிறார் மோடி. அங்கு அணு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் கலந்து கொள்கிறார். இருவரும் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
சவூதி பயண்ம்
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகையில் ரியாத் செல்கிறார் பிரதமர். கடந்த ஆறு ஆண்டுகளில் அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தகது. இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.